ஜாதிவாரியான கணக்கெடுப்பை மேற்கொண்டு, தமிழகத்திற்கான இட ஒதுக்கீட்டு அளவை நிர்ணயம் செய்தபிறகு தனி ஒதுக்கீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
2010-07-29 21:22:06
அருந்ததியர் மற்றும் சிறுபான்னையினருக்கு வழங்கப்படும் உள் ஒதுக்கீட்டைப்போல் வன்னியர்களுக்கும் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் இராமதாஸ், முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பதிலளித்த முதல்வர் கருணாநிதி பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை இஸ்லாமியர், அருந்ததியர், பழங்குடியினர் என அனைத்து சமூகத்தினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கியது தி.மு.க. ஆட்சிதான். இந்நிலையில் அருந்ததியர் மற்றும் சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டையும், வன்னியர்களுக்கு 20 விழுக்காடு தனி இட ஒதுக்கீட்டுடன் ஒப்பிடுவது பொறுத்தமற்றது என்று அவர் தெரிவித்தார். தமிழகத்தில் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கென நிறைவேற்றப்பட்ட சட்டம் குறித்து உச்சநீதிமன்றம் இடைக்கால தீர்வை வழங்கியுள்ளது. இதன்படி ஒரு மாநிலம் 50 இட ஒதுக்கீட்டு விழுக்காட்டை மிஞ்சவேண்டும் என்றால் அதனை நியாயப்படுத்துவதற்கு தேவையான புள்ளி விவரங்களின் அடிப்படையிலேயே முடிவு மேற்கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் புள்ளி விபரங்களை சேர்ப்பதற்கு ஜாதிவாரியான கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு மேற்கொண்டால்தான் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க முடியும் இதைவிடுத்து ஒதுக்கீடு செய்வது சட்டத்திற்கு புறம்பானதாகிவிடும்;. எனவே வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு என்ற பிரச்சினைக்கு உடனடியாக செயல்பட முடியாது. இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.