
டெல்லி: பிப்ரவரி முதல் தேதி தாக்கலாக உள்ள மத்திய பட்ஜெட், 130 கோடி இந்தியர்களின் விருப்பங்களை பிரதிபலிப்பதாக இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இரண்டு மாத கால பட்ஜெட் கூட்டத் தொடர் ஜன.31ம் தேதி தொடங்குகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்.1ம் தேதி, தனது 2வது மத்திய பட்ஜெட்டை சமர்ப்பிக்க வாய்ப்புள்ளது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜன.31ம் தேதி மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.
அதன்பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்வார். பட்ஜெட் அமர்வின் முதல் பகுதி ஜன.31ம் தேதி தொடங்கி பிப்.7ம் தேதி வரை தொடரும். அதன் பிறகு பட்ஜெட் ஆவணங்களை ஆய்வு செய்ய மூன்று வார இடைவெளி விடப்படும். தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் பகுதி மார்ச் 2ம் தேதி தொடங்கி ஏப்.3ம் தேதி வரை நடைபெறும். பிப்ரவரி மாத கடைசி நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யும் வழக்கத்தை பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 2017ம் ஆண்டு பிப்.1ம் தேதிக்கு மாற்றியது.
இந்த மாற்றம் மார்ச் 31ம் தேதிக்குள் பட்ஜெட் செயல்முறையை முடிப்பதற்காக கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், முதல் நிதியாண்டிலிருந்து புதிய நிதியாண்டுக்கான செலவினங்களைத் திட்டமிடுவதற்கு பல்வேறு துறை நிதிகளுக்கு அனுமதி அளிக்க வசதியாக இம்முறை பின்பற்றப்பட்டதாக மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மத்திய பட்ஜெட் குறித்து பலத்த எதிர்பார்ப்புகள் உருவாகி உள்ளன. இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, நாட்டு மக்கள் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் இந்த பட்ஜெட் நிறைவேற்றும் என குறிப்பிட்டுள்ளார். நாட்டின் வளர்ச்சிக்கான பல திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும் என்று கூறியுள்ள பிரதமர் மோடி, மக்களும் தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்’MyGov’ என்ற அரசின் இணையதளத்தில் வழங்க முன்வருமாறு கேட்டுக் கொண்டுள்ளார். வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.