நேரடி மானிய திட்டத்தால், கோடிக்கணக்கான ரூபாய் மிச்சம் ஆகியுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 1-ந்தேதியில் இருந்து, நாடு முழுவதும் சமையல் கியாஸ் நேரடி மானிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 15 கோடியே 30 லட்சம் சமையல் கியாஸ் வாடிக்கையாளர்களில், 75 சதவீதம் பேர் இத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு சந்தை விலையில் கியாஸ் சிலிண்டர் அளிக்கப்படுகிறது. அதற்குரிய மானியத்தொகை, அவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. போலிகளை ஒழிக்கவும், சிலிண்டர்களை வேறு பயன்பாட்டுக்கு திருப்பி விடுவதை தடுக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், சமையல் கியாஸ் நேரடி மானிய திட்டம் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மிச்சம் ஆகியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நாஸ்காம் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசும் போது, சமையல் கியாஸ் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக மானியம் வழங்கப்பட்டு வருகிறது. தொழில் நுட்பத்தின் பயன்பாட்டால், உண்மையான பயனாளிகளுக்கு மானியம் சென்றடைவது சாத்தியம் ஆகியுள்ளது. இத்திட்டத்தால், வேறு பயன் பாட்டுக்கு கியாஸ் சிலிண்டர்களை திருப்பி விடுவது நிறுத்தப்பட்டுள்ளது. எனது கணக்குப்படி, 10 சதவீத முறைகேடு நிறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், கோடிக்கணக்கான ரூபாய் மிச்சம் ஆகியுள்ளது என்று தெரிவித்த பிரதமர் மோடி, பெரும்பாலான உலக தலைவர்கள், கம்ப்யூட்டர் குற்றங்கள் பற்றித்தான் கவலைப்படுகிறார்கள். எனவே, அந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்திய இளைஞர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், மொபைல்போன் பயன்படுத்தவே எல்லோரும் அஞ்சுவார்கள் என்று தெரிவித்தார்.
Home » முக்கிய செய்திகள்: » சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தால், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சேமிப்பு!